மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமையில் அடங்காது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு அளித்துள்ளது.
மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா, கட்டாய மத மாற்றத்தை தடுக்க உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. துாண்டுதல், ஏமாற்றுதல், அச்சுறுத்துதல் ஆகியவற்றின் வாயிலாக மத மாற்றங்கள் நடக்கின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த வாரம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா,ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கட்டாய மத மாற்றத்தை தடுக்க, மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு பதில் மனு அளித்துள்ளது. அதில், மதச் சுதந்திரம் என்ற பெயரில் வேற்று மதத்தினரை மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமையில் அடங்காது. மேலும் மோசடி, ஏமாற்றுதல், வற்புறுத்தல் அல்லது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமையில் அடங்காது. கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.