புதுச்சேரியில், சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு 300 ரூபாயும், மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு 150 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும், மாதத்திற்கு ஒரு சிலிண்டர் என்ற விகிதத்தில், வருடத்திற்கு 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
புதுச்சேரி பட்ஜெட் அறிவிப்பில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிலிண்டர் விலையில் 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே முழு மானியம் வழங்கப்படுகிறது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு பாதி மானியத் தொகை மட்டுமே கொடுக்கப்பட உள்ளது. அத்துடன், கௌரவ ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானியத் தொகை வழங்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை, மஞ்சள் அட்டைதாரர்கள் எண்ணிக்கையே அதிகமாகும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக சொல்லப்பட்டுள்ளது.