கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மாரடைப்பு ஆபத்து அதிகரித்துள்ளது என பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் நரேஷ் புரோகித் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறுகையில், சமீபத்திய உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சிகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக கூறுகின்றன. கொரோனாவால் ரத்தம் உறைகிற போக்கு அதிகரிக்கிறது. இது மாரடைப்பு ஆபத்தை கூட்டுகிறது. நாட்டில் கடந்த 2 மாதங்களாக இதயம் செயலிழந்துபோவதால் திடீர் திடீரென ஏற்படுகிற இறப்புகள் அதிகரித்து இருக்கின்றன.இதில் இரண்டு வகையான இறப்புகள் நேரிடுகின்றன.
ஒன்று, கடுமையான மாரடைப்பால் மரணம் நேருகிறது. குறிப்பாக சற்று வயதானவர்கள், பாரம்பரிய இதய நோய் ஆபத்து காரணி கொண்டவர்கள். அடுத்து மாரடைப்பின்றி, வேறு காரணங்களால் மரணம் ஏற்படுகிறது. எனவே இதயநோயால் இளைஞர்களில் சம்பவிக்கிற மரணம் தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.