மக்கள் போராட்டம் காரணமாக கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சீன அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் கடந்த 3 நாட்களாக தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இதையடுத்து, சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளை அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், அங்கு 'ஜீரோ கோவிட்' என்ற கொள்கையை சீன அரசு கடைப்பிடித்து வருகிறது. ஏராளமான நகரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பல்வேறு நகரங்களில் பொது முடக்கம் அமலில் இருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு நகரங்களுக்கும் போராட்டம் பரவுவதால், சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தவறிய அதிபர் ஜிஜின்பிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சீன அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறும்போது, ‘‘பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டாம். கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ளபகுதிகளில் மட்டும் பொது முடக்கத்தை அமல் செய்யும் முடிவை, சீன அரசும், மாகாண அரசுகளும் இணைந்து மேற்கொள்ளும்’’ என்றார்.