கரோனா தடுப்பூசி திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், கடந்த சில நாட்களாக பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் தற்போது சராசரியாக தினசரி 5.87 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. கடந்த ஓராண்டாக இந்தியாவில் தினசரி கரோனா தொற்று குறைந்து வருகிறது.
சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு அனைத்து மாநில அரசுகளும் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளில் வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் 90 சதவீதம் பேருக்கு இருதவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சுமார் 28% பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்று அவர் பேசினார்.