நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி கேரளாவின் கொச்சி நகரில் நாளை தொடங்கி வைக்கிறார்.
கேரளாவின் துறைமுக நகரான கொச்சியில் 2021 பிப்ரவரியில் ரூ.1,137 கோடியில் நீர்வழி மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்டது. கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் வகையில் 76 கி.மீ. தொலைவுக்கு 15 நீர் வழித் தடங்களில் மெட்ரோ சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பத்து தீவுகளில் 38 நீர்வழி மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 78 படகுகள், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு படகிலும் 50 இருக்கைகள் உள்ளன. ஒரு படகில் 100 பயணிகள் செல்ல முடியும். குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொச்சி நீர்வழி மெட்ரோ சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.