கிரிமினல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பா.ஜ.க வை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், கிரிமினல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சட்ட கமிஷன் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் மீது மத்திய அரசும், தேர்தல் கமிஷனும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தேர்தல் கமிஷன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.