உலகளாவிய முறையில் கிரிப்டோ பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை ஒழுங்குபடுத்த பல உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்தியாவும் இது சார்ந்த பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு சார்பாக புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி, கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் 2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம், கடந்த மார்ச் 7ஆம் தேதி இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை படி, கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களுக்கு, வாடிக்கையாளர்கள் கேஒய்சி விவரங்களை கொடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், சந்தேகப்படும்படியான பரிமாற்றங்கள் குறித்து கிரிப்டோ நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், டிஜிட்டல் நாணயங்களைத் தவறாக பயன்படுத்துவது வெகுவாகக் குறையும் என்று நம்பப்படுகிறது.