ரஷ்யாவில் தாக்குதல் நடத்த தங்களுடைய ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.
கடந்த வியாழன் அன்று உக்ரைனுக்கு டேவிட் கேமரூன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து உரையாடினார். அது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆண்டுதோறும் 3000 கோடி பவுண்டு மதிப்பிலான உதவி அளிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து அளிக்கும் ஆயுதங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அந்த நாடு தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் விரும்பினால் ரஷ்ய எல்லைக்குள் எங்கள் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம். தங்கள் மீது படையெடுத்துள்ள ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு உரிமை உள்ளது என்று கூறினார்.
உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ரஷ்ய மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். ஐரோப்பா நாடுகள் ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றனர். இருந்தபோதிலும் நெடுந்தலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை அளிக்காமல் மேற்கத்திய நாடுகள் தவிர்த்து வந்தனர். இந்நிலையில், இங்கிலாந்து அமைச்சரின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் பேச்சுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சரின் பேச்சு உக்ரைனை தூண்டுவது போல் அமைந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடும் என்று ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமித்ரி கூறினார்.