பத்திர பதிவு சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மோசடி மற்றும் போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், போலி பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அதில், மத்திய சட்டத்திற்கு முரணாக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் புதிய சட்ட திருத்தம் மத்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவு ரத்து தொடர்பாக எந்த ஒரு காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்றும் இது ஒரு முரண்பாடான சட்ட திருத்தம் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், மோசடி பத்திரம்தான் என்பதை முடிவு செய்ய எந்த விதமான விதிமுறைகளும் , நடைமுறைகளும் வகுக்கப்படவில்லை. இதுபோல பத்திரப்பதிவு ரத்துகளை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் செய்ய முடியும். எனவே இந்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், என்.மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனு குறித்து நான்கு வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.