வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது தமிழகம் - புதுச்சேரி இடையே நாளை கரையை கடக்கிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது நாளை தமிழகம்-புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையைக் கடந்த பின்னர் அரபிக்கடலை நோக்கி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று முதல் 14-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வட கடலோர தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. நேற்று விடியவிடிய மழை கொட்டித் தீர்த்த நிலையில் விடிந்தும் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.














