டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய, பாஜக உயர்மட்டக்குழு, ரவிசங்கர் பிரசாத் மற்றும் ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரை மத்திய பார்வையாளர்களாக நியமித்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மத்திய தலைவர்கள் பங்கேற்று, புதிய முதல்வரை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட பெயர் துணைநிலை ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இதன் பின்னர், பதவிப் பிரமாண விழா நடைபெறும்.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 70 தொகுதிகளில் 48 இடங்களை கைப்பற்றி, பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். முதல்வர் பதவிக்கு பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாயா, பன்சூரி ஸ்வராஜ் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இரு துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.