டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், சில காரணங்களுக்காக ஒன்றிய உள்துறை அமைச்சகம் பட்ஜெட்டை நிறுத்தி வைக்கும்படி டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், 'நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் டெல்லி பட்ஜெட் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்காக டெல்லி மக்கள் வருத்தப்படுகின்றனர்' என கூறியிருந்தார்.
இந்நிலையில் டெல்லி அரசின் பட்ஜெட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று டெல்லி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் பட்ஜெட் தாக்கல் செய்தார்.