தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட சில முக்கிய பாதைகளில் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதை அமைப்பது, ரயில் பாதையின் தரம் மேம்படுத்துவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இதனால், விரைவு ரயில்களின் பயண நேரம் சிறிய அளவில் குறைந்து வருகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், விஜயவாடா - கூடூர், ரேணிகுண்டா - குண்டக்கல் உள்ளிட்ட ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த வழித்தடங்களில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த தடத்தில் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன.
இதனால் பயண நேரம் 20 முதல் 30 நிமிடங்கள் வரையில் குறைய வாய்ப்புகள் உள்ளன. மற்ற வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்று அவர்கள் கூறினர்.