இந்தியாவில் தில்லி, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் ட்விட்டர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக தில்லி மற்றும் மும்பை ட்விட்டர் அலுவலகங்களை மூட எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். இந்த அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து, ஊழியர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், உலகின் பல இடங்களில் ட்விட்டர் அலுவலகங்களுக்கு முறையான வாடகை செலுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இரு தினங்களுக்கு முன்னர், ட்விட்டரின் புதிய தலைமை அதிகாரியாக தனது வளர்ப்பு நாயின் புகைப்படத்தை வெளியிட்டு எலான் மஸ்க் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், செலவுகளைக் குறைக்கும் நோக்கில், பல்வேறு ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தில்லி மற்றும் மும்பை அலுவலகங்கள் மூடப்பட்டு, இந்தியாவில் பெங்களூரு ட்விட்டர் அலுவலகம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.