தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று பெற்ற 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு என்.ஏ.பி.எல். தரச்சான்று கிடைப்பது இதுவே முதல்முறை என அவர் கூறினார்.
டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு ஆகிய 3 துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் இல்லை. அதோடு பன்றி காய்ச்சல் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.














