வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் மீன்பிடி படகுகளுக்கான டீசல் மானியம் நிறுத்தி வைக்கப்பட்டது
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, மீன்வளத் துறை அதிகாரிகள், மீன்பிடி படகுகளுக்கான டீசல் மானியத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்துள்ளனர். சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் திருவான்மியூர் குப்பம் வரை 2,300 செயற்கை இழை படகுகள் மற்றும் 772 விசைப் படகுகள் உள்ளன. இந்த படகுகளுக்கு, எண்ணூர், ராயபுரம், காசிமேடு பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது.
பைபர் படகுகள் மற்றும் செயற்கை இழை படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டர் டீசலும், விசைப் படகுகளுக்கு 20 ஆயிரம் லிட்டர் டீசலும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தற்போது, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மீனவர்களுக்கு கடலுக்கு செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால், மீன்பிடி படகுகளுக்கு டீசல் வழங்கும் மானியம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, இது மறு அறிவிப்பு வரும்வரை தொடரும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.