ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் அடிக்கடி ஏற்படும் சர்வர், தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக, 'தட்கல்' முறையில் ரயில் டிக்கெட் பெறுவதில் பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் ரயில் டிக்கெட், தங்கும் விடுதி, பேட்டரி கார்கள், உணவு ஆர்டர்கள் என பல்வேறு முன்பதிவு வசதிகள் வழங்கப்படுகின்றன. சமீப காலமாக இந்த இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு, சர்வர் பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக, பயணிகள் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுக்க உதவும் 'தட்கல்' திட்டத்தில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது :ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் முன்பெல்லாம் ரயில் டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்வர். தற்போது, ஆம்னி பஸ்கள் டிக்கெட் பதிவு, உணவு 'ஆர்டர்' செய்வது, ஓய்வு அறைகள், ரயில் நிலைய 'வீல் சேர்' முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த இணையதளத்தின் சர்வர் வேகம் போதுமான அளவில் இல்லாததால் ஒரே நேரத்தில் அதிகம் பேர் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, இணையதளம் முடங்கி விடுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி., உயர் அதிகாரிகள் கூறியதாவது: தொழில்நுட்ப பிரச்சனைக்கு ஐ.ஆர்.சி.டி.சி., மட்டுமே காரணமல்ல. சில நேரங்களில் டெலிகாம் நிறுவனங்கள், வங்கிகளின் சர்வர் பிரச்சனையும் காரணமாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் இதற்கு உரிய தீர்வு காணும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.