கர்நாடகாவில் ஒலிம்பிக்கில் சாதிக்கும் வீரர்களுக்கு நேரடி பணி நியமனம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் நேற்று விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு, 'ஏகல்வயா விருதை' கவர்னர் தாவர்சந்த் கெலாட் வழங்கினார். இதில், முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று பேசுகையில், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பட்டதாரிகளுக்கு, நேரடி நியமனம் மூலம் அரசு வேலை வழங்கும் திட்டத்துக்கு அடுத்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும்.
ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற பட்டதாரிகளுக்கு, 'குரூப் பி' பணியும், கீழ் நிலை விளையாட்டு பதக்கம் வென்றவர்களுக்கு 'குரூப் சி, 'குரூப் டி' பணியும் வழங்கப்படும் என்றார். மேலும், இளம் விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து. கவனத்துடனும், கடின உழைப்புடனும் சாதித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன என்று கூறினார்.