தமிழகத்தில் கட்டணம் செலுத்தாத உள்ளாட்சிகளில் மின் வினியோகத்தை துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர், தெரு விளக்கு, சாலை பராமரிப்பு உள்ளிட்ட சேவை பணிகளை மேற்கொள்கின்றன. இதனால், மின் கட்டணம் செலுத்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும், 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இருப்பினும், அவை மின் கட்டணத்தை செலுத்தாமல், பல மாதங்களாக அலட்சியம் காட்டி வருகின்றன.
மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. அதை சரிசெய்யும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து நிலுவை மின் கட்டணத்தை விரைந்து வசூலிக்க திட்டமிட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து, மற்ற இணைப்புகளில் மின் வினியோகத்தை துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.