பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் இதுவரை 11.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.24 லட்சம் கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது .
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் துணைக் கேள்விக்கு மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அதில், 2013-ம் ஆண்டில் விவசாயத்துக்கு பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.23ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் ரூ.1.32 லட்சம் கோடி அளவுக்கு விவசாயத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 11.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டம் மூலம் ரூ.2.24 லட்சம் கோடியை நேரடியாக வழங்கியுள்ளோம்.
மேலும் பிஎம்-கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விவசாய செலவுகளை கவனித்துக் கொள்ள முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.