விக்ரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி 276 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 போட்டியாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் இந்த தொகுதியில் வாக்களித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 20 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதன் மூலம் இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது.