ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் தொடங்கி, பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், நேற்று ட்விட்டர் நிறுவனத்தின் அடையாளமான நீலக்குருவி லோகோ மாற்றப்பட்டுள்ளது. அவர், நீல குருவிக்கு பதிலாக, டோஜ் காயின் என்ற கிரிப்டோ கரன்சியின் அடையாளமான ‘நாய்’ புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், இது கணினிகள் மற்றும் லேப்டாப்புகளில் உள்ள ட்விட்டரில் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. கைபேசிகளில் உள்ள ட்விட்டர் செயலியில் மாற்றங்கள் இல்லை.
டோஜ் காயின் கிரிப்டோ கரன்சி கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு, பல ஆண்டுகளாகவே எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வருகிறார். மேலும், முன்பொரு முறை ட்விட்டரில் வாடிக்கையாளர் ஒருவர், “ட்விட்டரை நீங்கள் கையகப்படுத்தி குருவிக்கு பதிலாக நாய் புகைப்படத்தை பதிவிடுங்கள்” என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, தற்போது சின்னம் மாற்றப்பட்டுள்ளதாக மஸ்க் கூறியுள்ளார். இது உலக அரங்கில் பேசு பொருளாக உள்ளது. இந்நிலையில், இந்த லோகோ மாற்றம் எதிரொலியாக, கடந்த 24 மணி நேரத்தில் டோஜ் காயின் கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30% உயர்ந்துள்ளது.