சொத்து மதிப்புகளை பொய்யாக உயர்த்தி காட்டி மோசடி செய்ததற்காக டொனால்ட் டிரம்ப் ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது மோசடி, பாலியல் மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளன. தொழில் அதிபர் ஆன டிரம்ப் நிதி மற்றும் வங்கி அமைப்புகளிடம் கடன் பெற தனது சொத்து மதிப்புகளை பொய்யாக உயர்த்தி காட்டி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. எனினும் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இந்நிலையில், நிதி மோசடி வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி ஆர்தர் அளித்த தீர்ப்பில், கடன் பெற சொத்து மதிப்புகளை மோசடியாக உயர்த்தி காட்டி உள்ளார். அதற்காக அவருக்கு அபராதமாக 364 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ( ரூ.3 ஆயிரம் கோடி) செலுத்த வேண்டும் என்று அபராதம் விதிக்கிறேன். மேலும் நியூயார்க் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற அவருக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கிறேன் என்று அறிவித்தார்.
இந்த வழக்கில் ட்ரம்பின் மகன்கள் எரிக் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோருக்கு தலா 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்ய உள்ளதாக ட்ரம்ப் ஆதரவு வழக்கறிஞர் தெரிவித்தார்.