வரும் 2025 ஆம் ஆண்டிற்குள், உலக மக்கள் அனைவரும் தங்கள் உணவில் உள்ள உப்பின் அளவை 30% வரை குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது. உடலுக்கு அத்தியாவசியத் தேவையான சோடியம் எனப்படும் உப்பின் அளவு சிறிது அதிகரித்தாலும், இதய நோய், ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதாக உலகச் சுகாதார மையம் எச்சரித்துள்ளது. மேலும்,
உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள 5% உறுப்பு நாடுகள் மட்டுமே, நிர்ணயித்துள்ள உப்பின் அளவை கடைப்பிடித்து வருகின்றன. மற்ற 73% நாடுகள் இதனை முறையாகச் செயல்படுத்தவில்லை என்று கூறியுள்ளது. எனவே, முதல் முறையாக, உப்பின் அளவை குறைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சராசரியாக, ஒரு மனிதன், நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பு மட்டுமே சேர்க்க வேண்டும். ஆனால், உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், இதைவிட 2 மடங்குக்கும் அதிகமாக, 10.8 கிராம் அளவில் உப்பை உட்கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, உப்பை குறைப்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், உப்பின் அளவை குறைத்து உட்கொள்ளும் பொழுது, 2030 ஆம் ஆண்டு வாக்கில் 70 லட்சம் பேர் நோயிலிருந்து காப்பாற்றப்படுவர் எனவும் தெரிவித்துள்ளது.