இனி தொலைபேசியில் பேசும்போது ஹலோ சொல்வதற்கு பதிலாக வந்தே மாதரம் எனக் கூறுமாறு அரசு அதிகாரிகளுக்கு மகராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு அண்மையில் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பொது நிர்வாகத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தொலைபேசியில் குடிமக்கள் அல்லது அதிகாரிகளிடம் பேசும்போது 'ஹலோ' என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக 'வந்தே மாதரம்' என்று கூறிய தங்களது பேச்சை தொடங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அபு ஆஸ்மி, ''நான் தாக்கரேவை சந்திக்கும்போது அவர் எப்போதும் 'ஜெய் மகாராஷ்டிரா' என்றே கூறுவார். அவரது தொண்டர்களும் அப்படி சொல்வார்கள். ஏன் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவே அப்படித்தான் சொல்வார் என்று கூறினார்.
மேலும், இது முஸ்லிம்களை பிரித்துக்காட்டவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் (முஸ்லிம்கள்) நாட்டை நேசிக்கிறோம். ஆனால் அல்லாஹ்வின் முன் மட்டுமே தலை வணங்குவோம். 'வந்தே மாதரம்' என்று சொல்ல முடியாது. மாறாக 'சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான்' என்று சொல்வோம்'' எனத் தெரிவித்துள்ளார்.