கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரேஷன் பொருள்களை டோர் டெலிவரி செய்யும் வசதி குறித்து கூட்டுறவு துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய தர நிர்ணயக் கழகத்தின் ஐஎஸ்ஓ தரச்சான்று பெறுவது தொடர்பாக, மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண் இயக்குநர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பயிற்சியை தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆண்டு ரூ.10,292 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.12 ஆயிரம் கோடி பயிர்க் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 33,000 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களை ஈர்க்கும் வகையில், வீட்டுக்கே சென்று பொருட்களை விநியோகிக்கும் ‘டோர் டெலிவரி’ முறை, அனைத்து பொருட்களையும் தரமாக வழங்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.