பேருந்தில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தான் பொறுப்பு என்று போக்குவரத்துக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முறையற்ற பயணம் செய்து வருகிறார்கள். அதனை தடுக்கும் வகையில் இன்று அனைத்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து படிக்கட்டு பயணம் உள்ளிட்டவற்றை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம் என ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அறிவுறுத்த வேண்டும். அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால் காவல் நிலையத்தில் அல்லது அவரச காவல் உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.