கடந்த 2022 ஆம் ஆண்டு, தமிழகத்தின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை மானிய கோரிக்கையின் போது, போதைப் பொருள் ஒழிப்பில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் பதக்கங்களைப் பெறும் காவல் அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க், இந்த பதக்கத்திற்கு முதன்மையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதில் இவர் சிறப்பாக பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டு அவருக்கு இந்த சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவரைத் தவிர, கோவை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், சேலம் உட்கோட்ட இருப்புப் பாதை காவல்துறை கண்காணிப்பாளர் மா குணசேகரன், நாமக்கல் மாவட்ட காவல் சார்பு ஆய்வாளர் சு முருகன், நாமக்கல் முதல் நிலை காவலர் ரா. குமார் ஆகியோருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, சென்னையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில், முதல்வர் மு க ஸ்டாலின் இவர்களுக்கு பதக்கங்களை வழங்குவார் என கூறப்பட்டுள்ளது.