அயர்லாந்து நாட்டில், குழந்தைகளை மையப்படுத்தி வன்முறைத் தாக்குதல் மற்றும் கலவரம் நிகழ்ந்துள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று, அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள பள்ளிக்கு அருகே, மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. அவர் பள்ளி குழந்தைகளை கத்தியால் குத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதில், படுகாயம் அடைந்த 5 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரது தாக்குதலில் 5 வயது சிறுவன், 6 வயது சிறுமி, 30 வயதான பெண்மணி ஆகியோரும் காயமடைந்துள்ளனர். சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த பொதுமக்கள், உடனடியாக செயல்பட்டு, வன்முறையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, டப்ளின் நகரில் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். குறிப்பாக, காவல் துறையினர் மீது வன்முறைத் தாக்குதலில் களமிறங்கினர். வன்முறையை கட்டுப்படுத்த, டப்ளின் நகர் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கலவரத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.