இஸ்ரேல் நாட்டில், நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் சட்டத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொண்டுவர திட்டமிட்டு இருந்தார். ஆனால், இதற்கு பொதுமக்கள் இடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இஸ்ரேல் வரலாற்றிலேயே முதல் முறையாக, லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர்.
இந்நிலையில், நேற்று, இஸ்ரேலின் அனைத்து வர்த்தகத் துறையினரும் பணி முடக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலின் அதிபரும் மக்களுக்கு துணையாக நிற்க, நெதன்யாகுவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மேலும், அவர் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளதால், இந்த சட்ட திருத்தம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று மக்கள் கருதுகின்றனர். எனவே, நாட்டின் ஜனநாயக மாண்புகளை மீட்க, சட்டத்தை கொண்டு வரக்கூடாது என்பதில், மக்கள் உறுதித் தன்மையோடு இருந்தனர். அதன் விளைவாக, தற்போது, நீதித்துறை சீரமைப்பு நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.














