ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் காந்த் முஞ்சால், நிதி மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை செய்து வந்த அமலாக்கத் துறையினர், அவருக்கு சொந்தமான 3 அசையா சொத்துக்களை முடக்கியுள்ளனர். இவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 24.95 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களின் பெயரில் வெளிநாட்டு ரூபாய் வாங்கி, தனது சொந்த பயன்பாட்டுக்காக உபயோகித்ததாக பவன் காந்த் முஞ்சால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது மத்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறுவது போல் ஆகும். விதிகளின் படி 2.5 லட்சம் டாலர்கள் மதிப்பில் மட்டுமே ஒரு ஆண்டுக்கு இதுபோல பரிவர்த்தனை செய்ய முடியும். எனவே, அவரிடம் இருந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு 50 கோடியை எட்டும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், பவன் காந்த் முஞ்சால் உடன் இணைந்து ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரிகளான விக்ரம் கஸ்பேகர் மற்றும் ஹரி குப்தா ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், அமலாக்க துறை அதிகாரிகள் இது தொடர்பான தங்கள் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.