சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, செட்டிநாடு குழுமம் இயங்கி வருகிறது. சிமெண்ட் நிறுவனம், நிலக்கரி நிறுவனம், சர்வதேச ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவை செட்டிநாடு குழுமம் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அண்ணா சாலையில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள அலுவலகம் ஆகியவற்றில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
வெளிநாட்டில் 110 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும், பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகை வைத்ததற்கான ஆதாரங்களும் அமலாக்கத் துறைக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில், கணக்கில் வராத 23 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில், செட்டிநாடு குழுமம், 700 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.