ஏறு தழுவுதல்

இன்று “ஜல்லிக்கட்டு” என்று பரவலாக அறியப்படும் விளையாட்டிற்கு ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல், ஏறுகோடல் என்று பல பெயர்கள் இருந்துள்ளதை வரலாற்றின் ஏடுகளில் இருந்து அறியலாம். தமிழர்களின் மரபுவழி வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு ஆண்டுதோறும் தை மாதத்தில், பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படுகிறது. சங்க இலக்கியங்களிலும், பழமையான திராவிடர் நாகரிகம் தொடர்பான அகழ்வுகளிலும் ஏறு தழுவுதலுக்கான அடையாளங்கள் சித்திரங்களாகவோ, புதைப் படிமங்களாகவோ கிடைத்திருக்கின்றன. சிந்துவெளி நாகரிக அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட முத்திரை ஒன்றில் ஒரு […]

இன்று “ஜல்லிக்கட்டு” என்று பரவலாக அறியப்படும் விளையாட்டிற்கு ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல், ஏறுகோடல் என்று பல பெயர்கள் இருந்துள்ளதை வரலாற்றின் ஏடுகளில் இருந்து அறியலாம். தமிழர்களின் மரபுவழி வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு ஆண்டுதோறும் தை மாதத்தில், பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படுகிறது.

சங்க இலக்கியங்களிலும், பழமையான திராவிடர் நாகரிகம் தொடர்பான அகழ்வுகளிலும் ஏறு தழுவுதலுக்கான அடையாளங்கள் சித்திரங்களாகவோ, புதைப் படிமங்களாகவோ கிடைத்திருக்கின்றன. சிந்துவெளி நாகரிக அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்பது உறுதியாகிறது. மேலும் சிந்துவெளி மக்கள் காளையை வணங்கியுள்ளனர் என்பது அகழாய்வில் கிடைத்த சான்றுகளின் படி உண்மையாகும். இன்றும் தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் காளைகள் வணங்கப்படுகின்றன. மேலும் கீழடி ஆய்வுகளும் காளைகளுடன் விளையாடும் காளையர் விளையாட்டு தமிழகத்தில் இருந்ததை உறுதி செய்கிறது.

கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்று இவ்விளையாட்டு தமிழ் இலக்கியத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. கலித்தொகையின் முல்லைக்கலியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவுதலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு ஆகியவைச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. அதில் இடம்பெறும் "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என்றப் பாடல் வரி, காளையை அடக்கும் வீரனுக்குப் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கும் வழக்கம் சங்க காலத்தில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் மற்றும் சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதலைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் வடிவமே இன்றைய சல்லிக்கட்டு என்பது தெளிவாகிறது.

ஏறு தழுவுதல் என்று அறியப்பட்ட விளையாட்டை ஜல்லிக்கட்டாக மாற்றியவர்கள் நாயக்க மன்னர்கள் ஆவர். அவர்கள் காலத்தில் காளைகளின் கழுத்தில் சல்லிக்காசுகளைக் கட்டி ஓடவிட்டு, அதனை அடக்கி, அக்காசுகளை எடுப்பதே விளையாட்டின் முறை என்றானது. எனவே "ஏறு தழுவுதல்" என்ற பெயர் வழக்கொழிந்து, "ஜல்லிக்கட்டு" என்ற பெயர் வந்தது.

இன்றையக் காலகட்டத்தில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பெரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது. எனினும் உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிகின்றனர்.

இன்றும் போர்ச்சுகல், மெக்சிகோ, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் “காளைப்போர்” முக்கியமானத் தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக நடைபெறுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த விளையாட்டு இருந்ததற்கான சான்றுகள் பல உள்ளன. எகிப்தில் உள்ள பெனி ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் அரண்மனைச் சித்திரங்களிலும் காளைப்போர் இடம்பெற்றுள்ளது.

வெளிநாடுகளின் காளைப் போரில் காளை நிச்சயம் உயிரிழக்க நேரும். ஆனால் விளையாட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, தமிழர்கள் உயரிய அறத்தைத் தவறாமல் பின்பற்றினார்கள். எனவே வென்றாலும் தோற்றாலும் தமிழர்கள் காளைகளைக் கொல்வதில்லை. இதுவே அறவழியில் நிகழும் தமிழரின் ஏறு தழுவுதலுக்கும் வெளிநாட்டின் காளைச் சண்டைக்கும் உள்ள வேறுபாடாகும்.

அறவழியில் நடத்தப்படும் இந்த விளையாட்டு, தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது. இதில் மாடுகள் வணங்கவும் கொண்டாடவும் படுகின்றன. ஆனால், 2006ஆம் ஆண்டு, இந்த விளையாட்டு, மாடுகளைத் துன்புறுத்துவதாகப் புனையப்பட்டுத் தடை விதிக்கப்பட்டது. பதினோரு ஆண்டுகளாகத் தமிழர்கள் இந்த வீர விளையாட்டு நடப்பதற்காக விதிக்கப்பட்டத் தடையை எதிர்த்துப் போராடி வந்தனர். இறுதியில் 2017ஆம் ஆண்டு, தமிழினத்தின் அடையாளமான இந்த விளையாட்டை மீட்டெடுக்கத் தன்னெழுச்சியாகப் பலப் போராட்டங்கள் நிகழ்ந்தன. தமிழகத்தை நோக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தப் போராட்டமாக 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டம் திகழ்ந்தது. இந்த அறவழிப் போராட்டங்கள் மூலமாக, அறமும் வீரமும் கலந்த “ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு” தடையிலிருந்து மீட்கப்பட்டது. இந்நிகழ்வு வரலாற்றில் நிலைத்து நின்று, தமிழர் பெருமையை என்றென்றும் பேசும்.

1
1
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu