இன்று முதல் எழும்பூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் இடமாற்றம் அடைந்துள்ளது.
எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பல்வேறு நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி - இர்வின் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது. மேலும் ரயில் நிலைய கட்டிடங்கள்,பல அடுக்கு வாகன நிறுத்த இடங்கள், நடை மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இங்கு மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் வாகன நிற்கும் இடம் உள்ளது. தற்போது அங்கு நடைபெற்று வரும் பணிகளால் இன்று முதல் வாகன நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிற்குமிடம் எழும்பூர் தெற்கு ரயில்வே பயண சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்கு பக்கத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அதை அனைத்து பயணிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.