வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தின் மீது விதிக்கப்பட்ட வருமான வரியை நீக்குவதற்கு எல் சால்வடார் நாட்டில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்க நாடு எல் சால்வடார். இங்கு அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் வகையில் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தின் மீது விதிக்கப்பட்ட வருமான வரியை நீக்குவதற்கு இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது. இதன் மூலம் அதிகளவு அந்நிய முதலீட்டை ஈர்க்க முடியும் என்று நம்புகிறது.
இந்த சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய எம் பி கள் வெளிநாடுகளில் இருந்து பணப்பரிமாற்றம் மற்றும் நிறுவனங்களில் முதலீடு போன்ற வடிவங்களில் வரும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளனர். இந்த சட்ட சீர்திருத்தத்திற்கு முன்பாக வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானம் நாட்டிற்குள் வரும்போது 30 சதவீத வருமான வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.