டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், கடந்த வருடம் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, அவரது சொத்து மதிப்பு மிகவும் சரிந்தது. இதனால் அவர் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்போது 2 மாதங்களுக்கு பின்னர், மீண்டும் அவர் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.
எலான் மஸ்கின் தற்போதைய சொத்து மதிப்பு 187 பில்லியன் டாலர்களாக உள்ளது. எனவே,185 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன், இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த எல் வி எம் ஹெச் உரிமையாளர் பெர்னர்ட் அர்னால்டை இவர் முந்தியுள்ளார். ஜனவரி மாதம் முதலே, டெஸ்லா நிறுவனப் பங்குகள் உயர்ந்து வந்தன. 2023 ஆம் ஆண்டு தொடக்கத்துடன் ஒப்பிடுகையில், திங்கட்கிழமை அன்று, டெஸ்லா நிறுவனப் பங்கு மதிப்பு 100% உயர்ந்து, 207.63 டாலர்களுக்கு வர்த்தகமானது. டெஸ்லா வாகனங்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது, முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது, உள்ளிட்ட பல காரணங்களால் பங்கு மதிப்பு உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாகவே, எலான் மஸ்க் மீண்டும் முதல் இடத்திற்கு வந்துள்ளார்.