ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து, அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நிறுவனத்தின் 50% பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் விதித்துள்ளார்.
அதன்படி, ஊழியர்கள் ஒவ்வொருவரும் வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். மேலும், கொரோனா காலம் நிறைவடைந்து விட்டதால், வீட்டிலிருந்து பணி செய்யும் சலுகை வழங்கப்பட மாட்டாது. அனைவரும் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும். அத்துடன், அலுவலகத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச உணவுகள் ரத்து செய்யப்படும். இந்த அறிவிப்பால், ட்விட்டர் பணியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும், இந்த விதிமுறைகளுக்கு கட்டுப்படவில்லை என்றாலோ, பணி செய்ய விரும்பவில்லை என்றாலோ, பணியாளர்கள் தாராளமாக ராஜினாமா செய்யலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.