புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய ஆணையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 'மாண்டஸ்' புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக செய்யப்பட வேண்டிய தயார்நிலைகள் குறித்து ஆலோசிக்க விமான நிலைய ஆணையக அதிகாரிகள், தீயணைப்பு, விமான நிறுவன அதிகாரிகள், பாதுகாப்பு படை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை விமான நிலையத்தில் உள்ள அவசர கால குழுக்களும் தயார் நிலையில் வைக்க தீர்மானிக்கப்பட்டது.
சிறிய ரக விமானங்களை சரியான முறையில் நங்கூரமிடுதல், கடுமையான காற்று அல்லது சீரற்ற கால நிலையில் அவை நகராதவாறு தரையை கையாளும் கருவிகளை பாதுகாப்பதற்கும் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் விமான நிலைய உணவு கூடங்களில் போதுமான அளவு பொருட்களை அடுக்கி வைப்பதை உறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.