திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 35,000 லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு வெளி சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் லட்டுகளை திருடி விற்பனை செய்வதாக தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் வந்தது. இதையடுத்து லட்டுகளை எடுத்துச் செல்லும் பணிகள் கண்காணிக்கப்பட்டது.
அப்போது தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டு இருந்த 750 லட்டுகளை திருடி எடுத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரித்தபோது, இதுவரை 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரும் திருமலை 2-டவுன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.