தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் கல்லுாரிகள் மற்றும் அவற்றின் கட்டண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலைகழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர தமிழக அரசின் சார்பில் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கலந்தாய்விற்கு 1.58 லட்சம் பேர் விண்ணப்பித்து தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இம்மாதம் 20ம் தேதி துவங்கி 24 வரை நடத்தப்பட்டது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கல்லுாரிகளின் பெயர்கள், கலந்தாய்வு எண், உள்கட்டமைப்பு, கட்டண விபரங்கள், முகவரி உள்ளிட்ட விபரங்கள் கடந்த 22ம் தேதி வரை வெளியிடப்படவில்லை.
தற்போது கல்லுாரிகளின் விபரங்கள் தமிழக இன்ஜினியரிங் கமிட்டி www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்யும் கல்லுாரிகளின் தரம் உள் கட்டமைப்பு, கட்டணம் போன்றவற்றை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தின் இணைப்பில் உள்ள ஆர்கிடெக்ட் கல்லுாரிகளில் பி.ஆர்க்., படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுக்கு இன்று கடைசி நாள் என தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.