இங்கிலாந்தைச் சேர்ந்த ஓரன் நாள்சன் என்ற சிறுவனுக்கு தீவிர வலிப்பு நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், உலகிலேயே முதல் முறையாக வலிப்பு நோயை கட்டுப்படுத்தும் கருவி அவனது தலையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி பொருத்தப்பட்டதன் மூலம், ஒரு நாளில் சிறுவனுக்கு ஏற்படும் வலிப்பு எண்ணிக்கை 80% குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக ஓரன் நாள்சனுக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்த நிலையில், லண்டன் கல்லூரி பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து வலிப்பு நோய் கட்டுப்பாட்டு கருவியை அவனுக்கு பொருத்தி உள்ளன. கிட்டத்தட்ட 3.5 சென்டிமீட்டர் சதுர பரப்பளவில், 0.6 சென்டிமீட்டர் தடிமனில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. சிறுவனின் மண்டை ஓடு அதற்கேற்றவாறு வெட்டப்பட்டு, ஸ்குரு மூலம் இந்த கருவி இணைக்கப்பட்டுள்ளது. ஹெட்போன் போன்ற சாதனத்தின் வழியாக இந்த கருவிக்கு சார்ஜ் ஏற்றப்படுகிறது. இது சிறுவனின் மூளைக்குள் மின்சார அலைகளை புகுத்துவதால் வலிப்பு கட்டுப்படுகிறது. சிறுவன் தற்போது உடல் நலத்துடன் உள்ளதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.