ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இரண்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, வேகா-சி ராக்கெட் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து, கோப்பர்நிக்கஸ் சென்டினல்-1சி என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பிரான்ஸ் கயானாவில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், சென்டினல்-1சி செயற்கைக்கோளை பூமியில் இருந்து 700 கிலோ மீட்டர் உயர சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.
வேகா-சி ராக்கெட் நான்கு நிலைகளை கொண்டது. முதல் மூன்று நிலைகள் திட எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட்டை விண்ணில் உயர்த்தும். நான்காவது நிலை திரவ எரிபொருளைப் பயன்படுத்தி செயற்கைக்கோளை துல்லியமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) மற்றும் இத்தாலியின் ஏவியோ நிறுவனம் இணைந்து வேகா-சி ராக்கெட்டை வடிவமைத்துள்ளன. தற்போது, இதன் வாரிசான வேகா-இ ராக்கெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. புதிய வகை எரிபொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த ராக்கெட், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.