கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் நடத்தப்பட்ட தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளது.
கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கான தேர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்தது. ரெயில்வே ஊழியர்கள் பதவி உயர்வு பெற இந்த தேர்வை எழுதி இருந்தனர். இந்த தேர்வின் வினாத்தாளை கசியவிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டதாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோதனைகள் நடத்தி 17 ரெயில்வே ஊழியர்கள் கையால் எழுதப்பட்ட வினாத்தாள் நகல்களுடன் பிடிபட்டனர். அவர்கள் ரெயில்வே இளநிலை லோகோ பைலட்டாக பணியாற்றி, பணம் கொடுத்து வினாத்தாளை மோசடியாக பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
மேலும், வினாத்தாள்களை வினியோகித்ததாக 9 ரெயில்வே அதிகாரிகள் மற்றும் மண்டல முதுநிலை மின் பொறியாளர் (ஆபரேஷன்) கைது செய்யப்பட்டனர். 8 இடங்களில் சோதனை நடத்தி, ரூ.1 கோடியே 17 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. இது வினாத்தாள் விற்பனைக்காக வசூலிக்கப்பட்ட தொகை என தெரியவந்தது.