பழனியில் அகழ்வாராய்ச்சி நடத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்ந்த நாரயணமூர்த்தி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், பழனி அருகே உள்ள பாடியூர் கிராமத்தல் ஒரு பழமையான மணல் மேடு இருந்தது. அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்ட நாங்கள், 2017 ம் ஆண்டு 30 அடி ஆழத்திற்கு தோண்டி பார்த்தோம். அப்போது அங்கு மண்பாண்டங்கள், சுடுமண் பொம்மைகள், முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள் உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. 3 முதல் 4 ஏக்கர் வரை உள்ள இந்த மணல் மேட்டை தகர்த்து அரசு மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதியில் மண் மேடு மட்டுமே எஞ்சியுள்ளது.
இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் மிகவும் பழமையானவை. சங்ககாலத்தை சேர்ந்தவை. எனவே பாடியூரில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கும். எனவே இங்கு மத்திய, மாநில அரசுகள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுகுறித்து உரிய பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.