இலங்கைக்கு அளித்த ரூ.8,200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து இந்தியா சலுகை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அப்போது இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32, 800 கோடி கடன் அளிப்பதாக ஒப்புதல் அளித்தது. அவற்றில் ஒரு பகுதியாக, ரூ.8,200 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆகும்.
இந்நிலையில் மேற்கண்ட கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு இலங்கை அரசு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து இந்தியா அதை ஏற்று, ரூ.8 ,200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பான திருத்த ஒப்பந்தம் இலங்கை மந்திரி சினேகன் சேமா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.