மெட்டா நிறுவனம், இந்த வாரம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் புதன்கிழமை வெளியாகும் என்று கருதப்படுகிறது. நிறுவனம் தொடங்கிய 18 ஆண்டுகளில் நடத்தப்படும் பெரிய எண்ணிக்கையிலான பணி நீக்க நடவடிக்கை இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மெட்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பு நடப்பு ஆண்டில் 70% குறைந்துள்ளது. எனவே, மெட்டா நிறுவனம் தனது செலவினங்களில் குறைந்தபட்சம் 10% ஐ குறைக்க திட்டமிட்டிருந்தது. அதன் பகுதியாக, இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு உயர் அதிகாரிகள் பணியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
கொரோனா பரவலின் போது, பல்வேறு துறைகள் இணையம் வாயிலாக செயல்படத் துவங்கின. எனவே, மெட்டா நிறுவனம், புதிதாக பல ஊழியர்களை பணி அமர்த்தியது. ஆனால், தற்போது தேவைக்கு அதிகமாக ஊழியர்கள் பணி செய்து வருவது தெரியவந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பர்க், ஜூலை மாதம் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பேசிய நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “நிறுவனத்தின் குறிப்பிட்ட சில குழுக்களில் ஊழியர் தேவை நிலவுகிறது. வேறு சில குழுக்களில் தேவைக்கு அதிகமான ஊழியர்கள் உள்ளனர். இதன் காரணமாக, பல்வேறு குழுக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது, எதிர்கால வணிகச் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, இந்த பணி நீக்கம் செய்யப்படவுள்ளது” என்று கூறினார்.