பிரதம மந்திரியின் உதவித்தொகை பெற ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து ஈரோடு அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் கனிமொழி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் கார்டு எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் உள்ள தபால் அலுவலகத்துக்கு சென்று பி.எம். கிசான் பதிவையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இ-சேவை மையத்திலும் பி.எம்.கிசான் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்த விவசாயிகளுக்கு மட்டுமே அடுத்த தவணையில் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.














