இந்த வாரத்தில் ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தை, வார இறுதியான வெள்ளிக்கிழமை எதிர்மறையாக நிறைவடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 316.94 புள்ளிகள் குறைந்து, 61002.57 புள்ளிகளில் நிலை பெற்றது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 91.65 புள்ளிகள் சரிந்து, 17944.2 ஆக நிலை கொண்டது.
வெள்ளிக்கிழமை வர்த்தக நாளன்று, வங்கி, நிதி நிறுவனங்கள், மருந்து துறை சார்ந்த நிறுவனங்கள், தொழில்நுட்பத் துறை சார்ந்த ஐடி நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் அதிகமாக விற்கப்பட்டன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 8 நிறுவனங்கள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 15 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, எல் அண்ட் டி 2.18%, அல்ட்ராடெக் சிமெண்ட் 1.81%, ஏசியன் பெயிண்ட்ஸ் 1.01% உயர்ந்தன. மேலும், என் டி பி சி, ரிலையன்ஸ், ஐடிசி, மாருதி சுசுகி, டாடா ஸ்டீல் பங்குகள் உயர்வை சந்தித்தன. அதே வேளையில், நெஸ்லே 3.12%, இண்டஸ் இண்ட் வங்கி 2.96% சரிந்தன. இவை தவிர, எம் அண்ட் எம், எஸ் பி ஐ, கோட்டக் வங்கி, டிசிஎஸ், எச் சி எல் டெக், சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ், ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.