மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில், ரயில்களில் கால்நடைகள் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்க, தடுப்பு வேலிகள் அமைக்க மேற்கு மண்டல ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில், 4 முறை இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில், கால்நடைகள் மோதியதால் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
மேற்கு மண்டல ரயில்வே துறையின் பொது மேலாளர் அசோக் குமார் மிஸ்ரா, இந்த திட்டத்திற்கான டெண்டர்களை வரவேற்று பேசியுள்ளார். சுமார் 620 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த வழித்தடத்தில், வேலிகள் அமைப்பதற்கு 264 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 1.5 மீட்டர் உயரத்திற்கு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேலிகள் அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக மிஸ்ரா தெரிவித்துள்ளார்.